முதல்வர் நலமுடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் - அப்பல்லோ மருத்துவமனை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதல்வர் நலமுடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார்  அப்பல்லோ மருத்துவமனை

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி இரவு உடல்நலக்குறைவினால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவர் சாதாரண உணவு எடுத்துக்கொண்டார். கண்காணிப்பில் உள்ளார் என்ற செய்திக் குறிப்பை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஓய்வு எடுத்துவருகிறார். பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே முதல்வர் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை