அதிமுகவிடம் பணம் வாங்கியதா தேமுதிக? சந்திரகுமார் பகீர் குற்றச்சாட்டு!
அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்தது என தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்திருக்கும் நிலையில் அந்த கூட்டணியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த கூட்டணியை அமைக்க அதன் ஒருங்கிணைப்பாளரான வைகோ அதிமுகவிடம் இருந்து ரூ.1500 கோடி வாங்கியதாக புகார் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து இதே கேள்வியை ஒரு செய்தி ஊடகம் முன்வைத்த நிலையில் நேர்காணலில் இருந்தும் வைகோ வெளியேறினார்.
இந்த நிலையில், விஜயகாந்தின் வலது கரமாக செயல்பட்டு வந்த சந்திரகுமார், அடுத்தடுத்து தேமுதிக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடத்தவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அவரது மனைவியும் பிரேமலதா திட்டவட்டமாக மறுத்து வந்த நிலையில்,
117 இடங்களை திமுகவிடம் விஜயகாந்த் கேட்டதையும், பாஜகவுடன் பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தியதையும் பேரம் படியாததால்தான் மக்கள் நலக் கூட்டணிக்கு போனதையும் சந்திரகுமார் அம்பலப்படுத்தினார்.
தற்போது அதிமுகவிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருப்பதாக சந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் கட்சி நலனை முன்னிறுத்தாமல் குடும்ப நலனை முன்னிறுத்துவதில்தான் பிரேமலதா அக்கறை காட்டுவதாகவும் சந்திரகுமார் சாடியுள்ளார்.