மகள் இந்தியா வருவதில் தாமதம்: பரோல் நீட்டிக்க கோரி நளினி மனு.. தாயார் பத்மா தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகள் இந்தியா வருவதில் தாமதம்: பரோல் நீட்டிக்க கோரி நளினி மனு.. தாயார் பத்மா தகவல்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். முருகனின் மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் உள்ளார்.

இதற்கிடையே, வெளிநாட்டில் வசித்து வரும் நளினியின் மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக நளினி கடந்த 25ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிபந்தனைகளுடன் பரோலில் வந்தார்.

தற்போது வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். இவர் சிறைத்துறை விதிமுறைகளின்படி தினமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை, நளினி சந்தித்து பேசினார்.

அப்போது மகளின் திருமணம் ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். நளினியின் மகள் ஹரித்ரா லண்டனில் இருந்து தமிழகம் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், ேமலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சத்துவாச்சாரியில் நளினியுடன் தங்கியுள்ள அவரது தாயார் பத்மா கூறுகையில், ‘28 ஆண்டுகளுக்கு பிறகு எனது மகள் நளினி, பேத்தி ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் செய்ய ஒரு மாதம் பரோலில் வந்துள்ளார். இதுவரை பேத்திக்கு மணமகனாக 4 பேரை தேர்வு செய்து வைத்துள்ளோம்.

பேத்தி ஹரித்ராவிடம் காண்பித்து மணமகன் இறுதி செய்யப்பட உள்ளார்.

லண்டனில் உள்ள பேத்தி ஹரித்ராவுக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வு முடிந்த பிறகு தான் தமிழகத்திற்கு வர உள்ளார். இதற்கிடையே நளினிக்கு ஒரு மாதம் பரோல் முடிவடைய உள்ளதால், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கக் கோரி நளினி தரப்பில் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நளினிக்கு நீதிமன்றம் மூலமாக பரோல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்ககோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

பரோல் நீட்டிப்பு தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

நீதிமன்றம் பரோல் நீட்டிக்காவிட்டால் வரும் 25ம் தேதி மாலை வேலூர் பெண்கள் சிறைக்கு நளினி திரும்ப வேண்டும்’ என்றனர்.

.

மூலக்கதை