30 கிராம் எடையில் மிகச்சிறிய செயற்கைக்கோள்: அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கரூர் அருகே வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைக்கோள் தயாரித்து அசத்தினர். இந்த செயற்கைக் கோள், 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்‘ என்ற போட்டியை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு அறிவித்து இருந்தது.
அதன்படி போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணில் செலுத்தக்கூடிய வகையில் 30 கிராம் எடையில் சிறிய வகை செயற்கைக்கோளைது தயாரிக்க வேண்டும். அதற்கு தேவையான உபகரணமான வெப்பத்தை தாங்க கூடியதும், எடை குறைவானதும், கீழே விழுந்தால் உடையாத தன்மை உடைய கார்பன் மற்றும் பைபரும் கலந்து செய்யப்பட்ட 3.5 சென்டி மீட்டர் அளவு கொண்ட முப்பரிமாண கலன்களை அந்த நிறுவனமே வழங்கியது.
இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் நவீன்குமார் தலைமையில் மாணவர்கள் சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் தங்களின் அறிவியல் ஆசிரியர் தனபால் வழிகாட்டுதலுடன் 30 கிராம் எடையில் சிறிய வகை செயற்கைக்கோளை தயாரித்தனர்.
இந்த செயற்கைக்கோளின் செயல்பாடுகள் அதன் நோக்கம், இதன் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்த பதிவுகள் அடங்கிய வீடியோவை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பிற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த அமைப்பின் சார்பில் தமிழக அளவில் தேர்தெடுக்கப்பட்ட 12 பள்ளிகளின் செயற்கைக்கோள்களில் வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்களின் செயற்கைக்கோளும் ஒன்றாகும். 
வருகிற 11-ந்தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாளில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதற்காக மாணவர்கள் 5 பேரும் தங்களின் வழிகாட்டியான ஆசிரியர் தனபாலுடன் காஞ்சீபுரம் மாவட்டம் சிறுசேரியிலுள்ள ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பின் வளாகத்திற்கு செல்கின்றனர். அங்கு சந்திரயான் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் இந்த செயற்கைக்கோள் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் இணைத்து விண்ணில் அனுப்பப்படும்.
விண்வெளியில் குறிப்பிட்ட உயரம் சென்றவுடன் பலூன் வெடித்து செயற்கைக்கோள் தனியாக பிரிந்து வானிலை நிலைமை குறித்த தகவல்களை சேகரித்துக்கொண்டு பாராசூட் அமைப்பின் உதவியால் பூமிக்கு வரும். அப்போது அது அனுப்பும் படங்கள், சமிக்ஞைகளை தரையிலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறுவது குறித்து இம்மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
இதுகுறித்து, செயற்கைக்கோளைத் தயாரித்த மாணவர் குழுவின் தலைவர் நவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
 ‘இன்றைய காலக்கட்டத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நிலத்தடி நீர் குறைந்துபோனதே இதற்கு காரணம். நிலத்தடி நீரை அதலபாதாளம் வரை சென்று உறிஞ்சி நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்கள் முக்கிய காரணமாகின்றன. எனவே சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் விதமாக அதன் வேர், தண்டு, பட்டை, இலை, பூ, காய், விதை ஆகியவற்றை சாறாக பிழிந்து பின் உலர வைத்து படிகமாக்கி அதை இந்த செயற்கைகோளில் வைத்து அனுப்ப முடிவு செய்தோம். 
விண்வெளிக்குச் சென்று பின் கீழேவரும்போது வளிமண்டல அழுத்தம், சூரிய கதிர்வீச்சின் தாக்கம், ஈரப்பதம் உள்ளிட்டவை இந்த படிகத்தில் உண்டாக்கும் விளைவுகளினால் அதன் ஜீன்கள், டி.என்.ஏ.வில் ஏற்படும் மாறுபாடுகளை கண்டறிந்து அதன்மூலம் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிப்பதற்கான வழிவகைகளை கண்டறிய உள்ளோம்.'இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை