வெங்காடு அரசு பள்ளியில் 50 அடி அகலத்தில் காமராஜர் உருவம்: மாணவர்கள் அசத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெங்காடு அரசு பள்ளியில் 50 அடி அகலத்தில் காமராஜர் உருவம்: மாணவர்கள் அசத்தல்

ஸ்ரீபெரும்புதூர்: மறைந்த முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, வெங்காடு அரசு பள்ளி மாணவர்கள் 50 அடி அகலத்தில் காமராஜரின் உருவப்படத்தை வரைந்து அசத்தினர். மறைந்த முதல்வர் காமராஜரின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.  

இந்நிலையில், பள்ளி அருகே 50 அடி அகலம், 60 அடி நீளத்தில் காமராஜர் திருவுருவ படத்தை பள்ளி மாணவர்கள் வரைந்து காட்சிப்படுத்தினர்.

இதை மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன் திறந்து வைத்து பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘மூன்றாம் சக்தி’ என்ற மாத இதழை, ஸ்ரீபெரும்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வெங்காடு உலகநாதன் வெளியிட்டார்.

பின்னர், பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டுவைத்தனர். மேலும், எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து அட்டைகளை பள்ளி மாணவர்கள் அனுப்பி வைத்தனர்.

இவ்விழாவில் தனியார் தொழிற்சாலை மனிதவள மேலாளர்கள் டேனியல், கென்னடி, ஜெயவேலு, அன்பு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை