கார்த்திகை தீபத்திருவிழா 2ம் நாள் கோலாகலம்: விநாயகர், சந்திரசேகரர் வீதியுலா

தமிழ் முரசு  தமிழ் முரசு
கார்த்திகை தீபத்திருவிழா 2ம் நாள் கோலாகலம்: விநாயகர், சந்திரசேகரர் வீதியுலா

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை சந்திரசேகரர் தங்க சூரிய பிரபை வாகனத்தில், மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இரவு  ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் வாண வேடிக்கையுடன் இரவு உற்சவ புறப்பாடு நடந்தது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத  அண்ணாமலையாரும், ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தனர்.

2ம் நாளான இன்று காலை விநாயகர், சந்திரசேகரர் சிறப்பு அலங்கரத்தில், அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர்.

அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும்  தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து சந்திரசேகரர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்தார்.

அப்போது  மாடவீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். இரவு விநாயகர், வள்ளிதெய்வானை முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஷ்வரர் வெள்ளி இந்திர  விமானங்களில் வீதியுலா நடைபெறும்.

.

மூலக்கதை