எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், சென்னையில் தொடங்கி வைத்தார்.

ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல  வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் அரசு துறைகளில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டு விடுகிறது.  ஆனால் கிரிமினல், ஊழல், லஞ்சம் வழக்கில் தண்டிக்கப்படும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள்  பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டு அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் என்று சட்ட விதிகள் உள்னன. இதனை நீக்கி, தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை  விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாநிலம் முழுவதும், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உறுதி  அளித்தது.

கடந்த 2014 -ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் எம்பி, எம்.எல்.ஏகள் மீதான 1,581 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி (2 நீதிமன்றங்கள்), கேரளா, மத்தியப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய 11 மாநிலங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால்  தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இந்த நீதிமன்றங்கள் செயல்படாமல் இருந்தது.

 சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகையில், எம்.எல்.ஏ, எம்.பி.,கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் முரளிதரன், ஜெகதீஸ் சந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஜெ.சாந்தி  நியமிக்கப்பட்டு உள்ளார்.

மூலக்கதை