காங். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜவை கண்டித்து தமிழகத்தில் 13ம் தேதி ஆர்ப்பாட்டம்... கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜவை கண்டித்து தமிழகத்தில் 13ம் தேதி ஆர்ப்பாட்டம்... கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: கர்நாடகாவில் காங்கிரஸ் எம். எல். ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக்கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடும் பாஜகவை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரும் 13ம் தேதி தமிழகத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது முதற்கொண்டு அதை சீர்குலைக்கிற வகையில் மத்திய அரசு மூலமாகவோ, கர்நாடக ஆளுநர் மூலமாகவோ பல்வேறு உத்திகளை பா. ஜ. கவினர் கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 13 பேரை பா. ஜ. கவினர் பல்வேறு உத்திகளை கையாண்டு ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கடிதங்களின் அடிப்படையில் ராஜினாமாவை ஏற்க முடியாது, நேரில் கடிதம் கொடுத்து விளக்க வேண்டுமென்று சபாநாயகர் தெளிவாக கூறிவிட்டார்.

இந்நிலையில் 13 சட்டமன்ற உறுப்பினர்களை பெங்களூரில் இருந்து தனி விமானத்தின் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்று நட்சத்திர ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அடைக்கப்பட்ட சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் அழைத்ததன் பேரில் அவர்களை சந்திக்க நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் டி. கே. சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்கக் கூடாது, மத்தியிலும், மாநிலங்களிலும் பா. ஜ. க மட்டுமே ஆட்சி செய்ய வேண்டுமென்கிற சர்வாதிகார, பாசிச போக்கில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. எனவே, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசை குதிரை பேரத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் மூலம் ஜனநாயக படுகொலை செய்து வருகிற பா. ஜ. கவை கண்டித்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

.

மூலக்கதை