‘டேப்லெட்’ வழங்கும் திட்டம் தாமதம்: ஆசிரியர்கள் வருத்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘டேப்லெட்’ வழங்கும் திட்டம் தாமதம்: ஆசிரியர்கள் வருத்தம்

திருவள்ளூர்: அரசு பள்ளிகளில், ‘க்யூஆர்’ கோட் பயன்படுத்தி பாடம் நடத்த, ‘டேப்லெட்’ வழங்கும் அரசின் திட்டம் தாமதம் அடைவதால், பள்ளிகளில் இத்திட்டம் தொய்வடைந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் கல்வித்துறையின் புதிய திட்டமாக புத்தகங்களில் ‘க்யூஆர்’ கோட் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இதனை ‘ஸ்கேன்’ செய்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு கற்பித்தல் செயல்பாடாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாடம் நடத்துவதற்கு, ஆசிரியர்களுக்கு ‘டேப்லெட்’ எனப்படும் கையடக்க கம்ப்யூட்டர் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

தற்காலிகமாக, செல்போன் மூலம், ‘க்யூஆர்’ பதிவை ‘ஸ்கேன்’ செய்து பாடம் நடத்தலாம் என அரசு அறிவுறுத்தியது.

இதன்படி, ஆசிரியர்கள் தற்போது பாடம் நடத்துகின்றனர்.

முதல் பருவத்தின்போது, ஆசிரியர்களுக்கு, ‘டேப்லெட்’ பயன்படுத்துவதற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்த்தனர்.

3ம் பருவமும் நிறைவு பெற, 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பள்ளிகளில் பாடங்களையும் 90 சதவீதம் நிறைவு செய்து விட்டனர். செல்போன் பயன்படுத்தி நடத்துவதால், அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டத்தை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பதால் குழந்தைகளும் அதிக ஆர்வமடைகின்றனர். இந்நிலையில், அதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் சூழல் குழந்தைகளை ஏமாற்றமடைய செய்கிறது.

எனவே, 3ம் பருவம் நிறைவடைதற்குள், ‘க்யூஆர்’ பயன்படுத்தி, பாடம் நடத்துவதற்கு ‘டேப்லெட்’ வழங்கப்படுமா என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

.

மூலக்கதை