திருமணமாகாமல் குழந்தை பெற்ற கல்லூரி மாணவி தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருமணமாகாமல் குழந்தை பெற்ற கல்லூரி மாணவி தற்கொலை

புதுக்கோட்டை: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஆட்டோ டிரைவர்.

இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன், தனது ஆட்டோவில் வந்த மாணவியுடன் நெருங்கி இருந்தவாறு செல்போனில் போட்டோ எடுத்துள்ளார்.

பள்ளி படிப்பை முடித்த மாணவி தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியிலும் தனியாக கம்ப்யூட்டர் பயிற்சியும் படித்து வந்தார். மாலையில் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற மாணவியை ஆட்டோ டிரைவர் மறித்து தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

அவர் மறுத்ததால் ஒன்றாக இருக்கும் படத்தை நெட்டில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். அவரது ஆசைக்கு இணங்கியதால் மாணவி கர்ப்பமானார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் குழந்தையை மாணவியின் பெற்றோர் தூத்துக்குடியில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அதன்பிறகு வீட்டில் இருந்த மாணவி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கல்லூரிக்கு சென்று வந்தார். திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் மாணவி மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புதுக்கோட்டை போலீசார் மாணவி தற்கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை