முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் க.ப.அறவாணன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் க.ப.அறவாணன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் க.ப. அறவாணன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தஞ்சை மாவட்டம் கடலங்குடியில் 9-8-1941 ல் பிறந்தவர், பேராசிரியர் க.ப. அறவாணன். இவரது பெற்றோர் பழநியப்பன், தங்கப்பாப்பு அம்மையார். 

க.ப. அறவாணனின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அருணாசலம் ஆகும். தனது பெயரை பின்னாளில் அறவாணன் என்று மாற்றிக்கொண்டார். 

பிறந்த ஊரில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றவர். அருகில் உள்ள விஷ்ணுபுரம் என்ற ஊரில் பள்ள இறுதி வகுப்புவரை பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர்  பட்டத்திற்கும், பி.ஒ.எல் பட்டத்திற்கும் பயின்றவர். முதுகலைப் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் (1965-1967) பயின்றவர்.

இவரது மனைவி பேராசிரியர் தாயம்மாள். அறிவாளன், அருள்செங்கோர் என்னும் இரு மகன்கள் உள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றவர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கி, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வர் பணி ஏற்றவர். 
சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர் (1970). தென்னாப்பிரிக்கா - செனகால் நாட்டுத் தக்கார் பல்கலைக் கழகத்தில் மானுடவியல் ஆய்வாளராக 1977-82 வரை பணிபுரிந்தவர்.

1987 வரை சென்னை லயோலா கல்லூரியிலும், பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1998-2001 வரை துணைவேந்தராகப் பணிபுரிந்தவர். 

இவர் தமது பணிக்காலத்தில் சமுதாயவியல் கல்லூரி என்பதை நிறுவி, அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்களின் வாழ்வில் விளக்கேற்றிய பெருமைக்குரியவர்.
தொய்வுற்று இருந்த, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் என்ற அமைப்பை, மிகப்பெரிய நிலைக்கு உயர்த்தி, தமிழாய்வுகள் சிறக்க வழிசெய்தவர். அறிவியல் தமிழியம், தேடல், முடியும், கொங்கு உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராக இருந்து நடத்தியவர்.

மூத்த பேராசிரியர்கள் வ.ஐ.சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியன் ஆகியோரின் அன்பிற்குரிய மாணவராகத் திகழ்ந்தவர். அவர்களின் வழியில் கடுமையாக உழைத்து வாழ்வின் உயர்நிலையை அடைந்தவர். 60-க்கும் மேற்பட்ட அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டவர். 

சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு, படைப்பு இலக்கியம் ஆகியவை இவர் பங்களித்து உள்ள துறைகள் ஆகும்.  தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை, தொல்காப்பியக் களஞ்சியம், கிழக்கும் மேற்கும், அற்றைய நாள்காதலும் வீரமும், தமிழரின் தாயகம், தமிழ்ச் சமுதாய வரலாறு, தமிழ் மக்கள் வரலாறு, அற இலக்கியக் களஞ்சியம் போன்றவை இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

இவரின் படைப்பு நூல்களாக "அவள் அவன் அது', "தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும்". "செதுக்காத  சிற்பங்கள்", "சொல்ல முடிந்த சோகங்கள்", "நல்லவங்க இன்னும்  இருக்காங்க", "கண்ணீரில் மிதக்கும் கதைகள்" ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் இலக்கியப் பரிசு உள்ளிட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். உலக நாடுகளுக்குப் பயணம் செய்து தமிழ், தமிழர் குறித்து உரையாற்றிய சிறப்பிற்கு உரியவர்.

பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  அவரது மறைவு தமிழ் ஆய்வுலகிற்குப் பெரிய இழப்பு ஆகும். அவரது மறைவிற்கு வலைத்தமிழ் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

மூலக்கதை