இயற்கை உரங்களை பயன்படுத்த வாழை விவசாயிகள் ஆர்வம்: கூடலூரில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு
கூடலுார்:கூடலுாரில் இயற்கை உரங்களை பயன்படுத்த வாழை விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதன் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் தென்னை மரங்களுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுவது வாழை. கடந்த சில ஆண்டாக தென்னையில் ஏற்பட்ட வாடல் நோய் காரணமாக, ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதற்கு மாற்று விவசாயமாக வாழை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.
கூடலுாரில் 200 ஏக்கருக்கும் அதிகமாக வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் இயற்கை உரங்களை பயன்படுத்தும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், சாண எரு ஆகிய இயற்கை உரங்களை விவசாயிகளே, தங்களது தோட்டத்தில் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.