பொறையார் விபத்தில் பலியான 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.7.50 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொறையார் விபத்தில் பலியான 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.7.50 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை : பொறையார் பஸ் டிப்போ விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 7 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்ட அறிக்கை:
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பொறையார் கிராமத்தில், அரசுப்போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனை இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில், கட்டடத்திற்குள் இருந்த கனி, மணிவண்ணன், தனபால், பிரபாகரன், பாலு, சந்திரசேகர், ராமலிங்கம் மற்றும் முனியப்பன் ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவத்தில் மூன்று நபர்கள் காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தேன்.    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். தகவல் அறிந்தவுடன், மீட்புப் பணியை உடனடியாக மேற்கொள்ளவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் அமைச்சர்கள் ஓ. எஸ் மணியன், எம். ஆர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்தத் துயர சம்பவத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு நிகழ்வாக தலா ரூ. 7. 50 லட்சம் பணமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000ம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து   வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு  சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

.

மூலக்கதை