தமிழகம், புதுவையில் தீபாவளி நாளில் 12 பேர் படுகொலை
சென்னை : தமிழகம், புதுவையில் தீபாவளியன்று ஒரே நாளில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு மது போதையில் இருந்த அந்தோணி என்பவர், கஞ்சா அருந்திக் கொண்டிருந்த 2 பேரிடம் கஞ்சா கேட்டுள்ளார்.
அதில் ஏற்பட்ட தகராறில் அவர் படுகொலை செய்யப்பட்டார். மதுரை மேலூர், வாடிப்பட்டி, சிலைமான், திடீர் நகர், முள்ளிப்பள்ளம் என 5 இடங்களில் நடந்த மோதலில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாம்பாலம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் சக்தி. இவர் நேற்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் அவர் படுகொலை செய்யப்பட்டார். அதேபோல, புதுவையில் ஒரு வீட்டில் இருந்த ரவுடிகள் 3 பேர் ஒரே நேரத்தில் வெடிகுண்டுகளை வீசி படுகொலை செய்யப்பட்டனர்.
அதேபோல, கோவை மாவட்டம் பொள்ளாச்சி லாட்ஜில் டிரைவர் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கோவை சிங்காநல்லூரில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். இவ்வாறு தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று ஒரே நாளில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தீபாவளி அன்று 12 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்காக மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டிருந்தனர்.
ரோந்து சுற்றி வந்தனர்.
ஆனாலும் போலீஸ் பாதுகாப்பை மீறி 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.