தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று,காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மத்திய வங்க கடலில் இருந்து, வடமேற்கு திசையில் ஒடிசாவை நோக்கி நகர்ந்து விட்டதால், அடுத்து வரும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை குறையும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஒடிசா அருகே வங்க கடலில் திடீரென காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறும் என்றும் அந்த சமயத்தில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதன் காரணமாக கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமை சென்னை உட்பட சில மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.



இந்நிலையில், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மத்திய வங்க கடலில் இருந்து வடமேற்கு திசையில் ஒடிசாவை நோக்கி நகர துவங்கி உள்ளது. இதனால் அடுத்து வரும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பெய்யலாம் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை