வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் நாளை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் நாளை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தீபாவளி நாளில்(நாளை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது.

இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். தீபாவளி நாளான 18ம்தேதி(நாளை) லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இன்னும் தென்கிழக்கு பருவமழை நிறைவடையவில்லை. எனவே வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதை தற்போது  கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

ஈரோடு மாவட்டம்  பெருந்துறையில் 1 செ. மீட்டர் மழை பெய்துள்ளது.

.

மூலக்கதை