அனைவரும் தாய்மொழியை தான் முழுமையாக கற்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அனைவரும் தாய்மொழியை தான் முழுமையாக கற்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை: காந்தியவாதியும், தக்கர்பாபா வித்யாலயாவின் நிறுவனருமான நிர்மலா தேஷ் பாண்டேவின் பிறந்தநாள் விழா சென்னை தி. நகரில் இன்று காலை நடந்தது. விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விழாவுக்கு தலைமை தாங்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நிர்மலா தேஷ் பாண்டேவின் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலின்போது தக்கர்பாபா வித்யாலயா அறக்கட்டளைக்கு நிதிஉதவி செய்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: மகாத்மா காந்தியின் புகழ் காலத்தால் அழியாதது. அவரது உன்னதமான சேவையில் நிர்மல் தேஷ் பாண்டேவும் தன்னையும் ஈடுபடுத்தி உள்ளார்.



அவர் நாடு முழுவதும் 40,000 கிமீ பாத யாத்திரை சென்றுள்ளார். காந்தி மக்களிடம் அமைதியை விரும்பினார்.

காந்தியின் கொள்கையை கிராமப்புற மக்களிடம் பரப்பியதில் நிர்மல் தேஷ் பாண்டேவின் பங்கு முக்கியத்தும் வாய்ந்தது. அவர் தன் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு இலவச விடுதி கட்டி கொடுத்துள்ளார்.

இதன் மூலம் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். பொருளாதார ரீதியாக தக்கர்பாபா வித்யாலயா அறக்கட்டளைக்கு ஏற்பட்ட பிரச்னைகளை நான் அறிவேன்.

குறிப்பாக, கடந்த 2016ல் வர்தா புயல் வந்தபோது அறக்கட்டளையின் விடுதிகள், நூலகங்கள் ஆகியவை இடிந்து விழுந்து கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்தேன். நல்ல மனிதர்கள் செய்த உதவியால் தற்போது அவை சீரமைக்கப்பட்டுள்ளன.



எந்த நேரத்திலும் இந்த அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன். எனது சம்பளத்தில் இருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கிறேன்.

நாம் அனைவருக்கும் நமது தாய் மொழி தான் மிக முக்கியம். அனைவரும் முதல் தாய்மொழியை தான் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.

எல்லா மாணவர்களும் பள்ளிக்கல்வி இறுதி ஆண்டு வரை கட்டாயம் தாய்மொழியை கற்க வேண்டும். தமிழக மாணவர்கள் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்.

தாய்நாடு, தாய்மொழியை மறப்பவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது. நமது வீட்டில் நம் தாய்மொழியை முழுமையாக கற்க வேண்டும்.

எல்லோரும் நமது தாயை அம்மா என்று தான் அழைக்க வேண்டும். மம்மி, டாடி, கேடி என்ற வார்த்தைகள் எல்லாம் கூடாது.

தாய்மொழி மிக அவசியம். இருப்பினும் பிற மொழிகளையும் நாம் கற்க வேண்டும்.

நம்மால் எவ்வளவு மொழிகளை கற்க முடியுமோ அவ்வளவு மொழிகளை கற்க வேண்டும். நான் ஆந்திராவில் பிறந்தவன்.

நானும் எனது பள்ளிப்பருவத்தில் இந்தியை எதிர்த்து போராடினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை