வேன் மீது பைக் மோதி தூக்கி வீசப்பட்டு : ரோட்டில் விழுந்த வாலிபர்கள் 2 பேர் பஸ்சில் சிக்கி சாவு.

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேன் மீது பைக் மோதி தூக்கி வீசப்பட்டு : ரோட்டில் விழுந்த வாலிபர்கள் 2 பேர் பஸ்சில் சிக்கி சாவு.

கூடுவாஞ்சேரி : வேன் மீது பைக் மோதியதில் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட 2 பேர், பஸ்சில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன் (25).

இவரது நண்பர் காரைக்குடியை சேர்ந்த அழகு கருப்பையா (25). இருவரும் மறைமலை நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

வண்டலூரில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இன்று காலை 8. 15 மணியளவில் காளீஸ்வரனும் அழகு கருப்பையாவும் ஒரே பைக்கில் வேலைக்கு புறப்பட்டனர்.

தைலாவரம்-ஜிஎஸ்டி சாலை கூட்ரோடு சந்திப்பு அருகே சென்றபோது, முன்னே சென்ற டெம்போ டிராவலர் வேன் திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் தடுமாறிய  பைக், அந்த டெம்போ டிராவலர் மீது வேகமாக மோதியது.

இதில் அழகு கருப்பையாவும் காளீஸ்வரனும் பைக்கில் இருந்து சாலையின் நடுவே தூக்கி வீசப்பட்டனர்.

அந்த சமயத்தில் தாம்பரத்தில் இருந்து கல்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து (த. எண்: 108) இவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியது. இதில் காளீஸ்வரன், அழகு கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்பகுதியில் மக்கள் கூடியதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

காளீஸ்வரன், அழகு கருப்பையா ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அரசு பஸ் டிரைவர் மற்றும் டெம்போ டிராவலர் டிரைவர் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

விபத்து காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

.

மூலக்கதை