சென்னையில் குழந்தையை கடத்திய சேலம் பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு
சேலம் : திருவண்ணாமலை அருகேயுள்ள செய்யாறு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது 2வது மனைவி மணிமேகலை (27).
இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கணவரை பிரிந்து வாழும் மணிமேகலை, குழந்தையை கவனிக்க போதிய வசதி இல்லை என மருத்துவமனை ஊழியர் சுபத்ராவிடம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் சேலம் குகையை சேர்ந்த வக்கீல் மணிமேகலையிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சென்னை சென்ற வக்கீல் மணிமேகலை, குழந்தையை கடத்தி சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சென்னை பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மில்லர் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று சேலம் வந்தனர். அவர்கள் குகை ஆற்றோரம் வடக்கு தெருவில் உள்ள மணிமேகலை வீட்டில் அதிரடி சோதனை நடத்தி, குழந்தையை மீட்டனர்.
வக்கீல் மணிமேகலை, அவரது கணவர் தீனதயாளன், உறவினர் ஐஸ்வர்யா ஆகியோரை கைது செய்து சென்னை அழைத்து சென்று விடிய விடிய விசாரணை நடத்தினர். இதில் அவர் போலீசில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மருத்துவமனைக்குள் வந்த மணிமேகலை தான் போலீஸ் உதவி கமிஷனர் என அங்கிருந்தவர்களிடம் அறிமுகம் செய்துள்ளார்.
அதே தோரணையில் சென்ற அவர், குழந்தையின் தாயிடம் குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுக்கவே குழந்தையை திருடிச்சென்றுள்ளார்.
அவர் வக்கீலுக்கு படித்துள்ளாரா? என விசாரணை நடத்தியதில் அதுவும் போலி என தெரியவந்துள்ளது. இவரது பேச்சில் சந்தேகம் அடைந்து நடத்திய தொடர் விசாரணையில், ஏற்கனவே ஒரு குழந்தையை திருடியது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு கோவையில் இருந்து சேலம் வழியாக சென்னை சென்ற ரயிலில் ஆண் குழந்தை ஒன்றை திருடியுள்ளார். அந்த குழந்தைக்கு தற்போது ஒன்றரை வயதாகிறது.
அதனை அவர் வளர்த்து வருகிறார். தற்போது அந்த குழந்தையை மீட்டுள்ளோம்.
அக்குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம். போலி வக்கீல் மணிமேகலை, குழந்தை திருடும் வேலையை தற்போது துவக்கியுள்ளார்.
இவ்வாறு திருடும் குழந்தைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
வேறு ஏதாவது குழந்தையை கடத்தியுள்ளாரா? வேறு யாருக்காவது இதில் தொடர்பு இருக்குமா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.