மண்டபம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடம் எதிர்பார்ப்பு :பயன்பாட்டுக்கு இப்ப வருமோ! எப்ப வருமோ!!

தினமலர்  தினமலர்
மண்டபம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடம் எதிர்பார்ப்பு :பயன்பாட்டுக்கு இப்ப வருமோ! எப்ப வருமோ!!

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் போலீஸ் ஸ்டேஷன் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது . இதற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்க்கு வராமல் உள்ளது. மண்டபம் முக்கிய கடற்கரை பகுதியாகும். இப்பகுதியில் மீனவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர் . இந் நிலையில் மண்டபம் போலீஸ் ஸ்டேஷன் ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால் சிரமத்தில் போலீசார் இருந்து வந்தனர். புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பல லட்சம் செலவில் பாம்பன் பாலம் அருகே இறக்கத்தில் மெயின் ரோட்டில் இருந்து தெற்குப்புறத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும், இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இன்னும் வாடகை கட்டத்தில் இயங்கி வருகிறது.
புதிய கட்டடம் கட்டப்பட்ட பகுதியில் தற்போது இரவு நேரங்களில் மறைவாக இருப்பதால், அப்பகுதியில் உள்ளவர்கள் அதனை மது பான பாராக மாற்றிவிட்டனர். மேலும் தங்க இடமின்றி சுற்றித்திரியும் ஆதரவற்றோர்கள் தங்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மண்டபம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை