அமைச்சர்கள் ஊழல் பட்டியல் கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமைச்சர்கள் ஊழல் பட்டியல் கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை

சென்னை : தமிழக அமைச்சர்கள் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது. தமிழக அரசு மீது கமல் லஞ்ச ஊழல் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு அமைச்சர்கள் பதிலடி கொடுத்திருந்தனர். இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை: இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல.

அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பு, சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.

ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி அமைச்சர் ஜெயகுமாரோ அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச். ராஜாவோ, நான் அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ, தெரியாமலோ என்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதி தான்.

நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளி வீசுபவர்கள்.

ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள். என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வரவைக்கிறது.

ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம். அமைச்சர் கட்டளை இது.

ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் அதற்குள் மறந்திருந்தால் நினைவுப்படுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி? இந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக்கொண்ட படி ஆதாரங்களை மக்களே இணையதளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோளே.
நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள்.

எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள். தற்கால அமைச்சர்கள் விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும்.

அத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ. பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இத்தனை லட்சம் பேரை, கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் இல்லை. நிற்க.

செய்தி சரியாகப் புரியாதவர்களுக்கு. . .

“ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சார் கேட்டார்ல. ? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம்.

கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது.

டிஜிட்டலா பதிவு செய்யுங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்யுங்க. ”

எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள்.

என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னைப் போல் வெகு சிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர்.

இது என் குரல்.

துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும். மக்கள் மந்தைகள் அல்லர்.

மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள். விரைவில் அது கேட்கும்.

தெளிவாக. உங்கள் கமல்ஹாசன்.

இவ்வாறு அறிக்கையில் நடிகர் கமல் கூறியுள்ளார்.

நடிகர் கமல் தன் அறிக்கையில், அரசின் ஊழல் தொடர்பாக பொதுமக்கள் ஆதாரத்துடன் அரசுக்கு இணையதளத்தில் புகார் அனுப்பும்படி கேட்டிருந்தார். இறுதியாக ஊழல் புகார் அளிக்க வேண்டிய இணைய முகவரியும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, அனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி http://www. tn. gov. in/ministerslist என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் அமைதிகாக்க வேண்டுகோள்: அமைச்சர்கள் மிரட்டல் விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள், கமலிடம் கேட்டபோது, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என கமல் கூறியிருக்கிறார். கோபத்தில் உள்ள அவரது ரசிகர்களும் போராட்டம் நடத்தும் முடிவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்து, அவர்களை அமைதி காக்கும்படி கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார் என கமலுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை