மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளை மண்டை உடைப்பு: காதலி குடும்பத்தினர் வெறிச்செயல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளை மண்டை உடைப்பு: காதலி குடும்பத்தினர் வெறிச்செயல்

பாபநாசம்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வடக்கூரை சேர்ந்தவர் வீரராஜ். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

இவரது மகள் அபிநயா(22). பட்டதாரி.

தஞ்சை அடுத்த கரந்தை குருவிக்கார தெருவை சேர்ந்த மணிவண்ணன் மகன் ராஜேஷ்(22). நாஞ்சிக்கோட்டை- கண்டிதம்பட்டு வழியாக செல்லும் மினி பஸ்சில் டிரைவர்.

இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டாக காதலித்தனர். இருவரும் வெவ்வேறு  சமூகத்தை சேர்ந்தவர்கள்.

காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மகளை வீட்டு சிறை வைத்தனர். நேற்று அபிநயா யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்து விட்டார்.

காதலன் ராஜேஷ் பாபநாசம் பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள துர்கா கோயிலில் தயாராக இருந்தார். அங்கு காதல் ஜோடி நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்தனர்.



அப்போது சினிமா காட்சி போல பெண் வீட்டார் கார்களில் அங்கு வந்தனர். அவர்கள் உருட்டுக்கட்டையால் மணமகனை தாக்கினர்.

இதில் அவருக்கும், மணமகனின் அண்ணன் தினேசுக்கும் மண்டை உடைந்தது. மாப்பிள்ளையுடன் 10க்கும் குறைவானவர்களே வந்திருந்ததால் தப்பி ஓடினர்.

அதே வளாகத்தில்தான் போலீஸ் நிலையமும் உள்ளது. போலீசார் வருவதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியது.

பாபநாசம் போலீசார் வழக்கு பதிந்து தாக்குதல் நடத்தியவர்களில் விக்னேஷ் என்பவரை மட்டும் கைது செய்தனர்.

மேலும் பலரை  தேடுகின்றனர்.   அடிதடி முடிந்த நிலையில் மணமகன் ராஜேஷ், மனைவியை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார்.

.

மூலக்கதை