யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு

BBC  BBC
யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு

இலங்கையில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆடி அமாவாசை தினத்தையொட்டி, கீரிமலையில் நடைபெற்ற பிதுர் கடன் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்த வைபவத்தில் கல்வி ராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணனும் கலந்து கொண்டிருந்தார்.

பிதுர் கடன்களை மேற்கொள்கின்ற முக்கிய புனித தலமாக விளங்குகின்ற கீரிமலை ஆலயப்பகுதி யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பெருந்தொகையான பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றி நிலை கொண்டுள்ள பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாணத்தின் பிரபல்யம் மிக்கதும், மீன்வளம் மிகுந்ததுமான மயிலிட்டி துறைமுகத்தையும் அதனைச் சூழ்ந்துள்ள பொதுமக்களின் காணிகளையும் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் போராடி வருகின்றார்கள்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் பலாலி விமான தளத்தைச் சூழவுள்ள காங்கேசன்துறை துறைமுகம் மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் படையினரின் பாதுகாப்பை முன்னிட்டு, இராணுவத்தால் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இவ்வாறு பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பிரதேசங்களில் ஒரு பகுதியில் மட்டுமே இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மயிலிட்டி துறைமுகத்தையும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களையும் மீளக் கையளிப்பதாகக் கூறிக்கொண்டு, அதன் அருகில் உள்ள இந்துக்கள் புனிதமாகக் கருதும் தலமாகிய கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் முயற்சிகள் மேற்கொள்வது கண்ணியமற்ற செயலாகும் என வடமாகாண முதலமைச்சர் சாடியுள்ளார்.

எந்த மதங்களைச் சார்ந்ததாயினும் மதத்தலங்களின் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வகையில் கீரிமலை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு இதனைப் புரிந்து கொண்டு மாற்றுத் திட்டங்களை முன்வைக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான முயற்சிகளை எதிர்த்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துமத முக்கியஸ்தர்களினால் சில தினங்களுக்கு முன்னர் ஆர்பபாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.

மூலக்கதை