பிணை வழங்கப்பட்டும் விளக்கமறியலில் தயா மாஸ்டர்

BBC  BBC

விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் தான் சுற்றவாளி என தெரிவித்ததையடுத்து, நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்பிணையுடன், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு அரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், சரீரப் பிணையாளிகளை நீதிமன்றம் நேரில் பார்வையிட வேண்டும் என தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், அந்தப் பிணையாளர்களை நாளை 11 ஆம் தேதி (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் இந்த வழக்கின் எதிரியாகிய தயா மாஸ்டரை வவுனியா சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்த பொதுமக்களை ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவிடாமல், விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களாகிய இளம்பரிதி மற்றும் திலக் ஆகியோருடன் இணைந்து தடுத்ததாக தயா மாஸ்டர் மீது குற்றம் சுமத்தி வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டிற்கு தான் சுற்றவாளி என தயா மாஸ்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விளக்கத்திற்கு நியமிக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிபதி, இவர் முன்னதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு, இவரைப் பிணையில் செல்ல அனுமதிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் வரையில் வடமாகாணத்தை விட்டு அவர் வெளியில் செல்லக்கூடாது.

ஒவ்வொரு நாளும் யாழ் தலைமையக போலீஸ் நிலையத்தில் காலை 9 மணிக்கும், பகல் 12 மணிக்கும் இடையில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து, 5 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 4 அரச ஊழியர்களின் சரீரப் பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார்.

ஆயினும், சரீரப் பிணையாளர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என்பதற்காக அவரை அது வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்டரையும் விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராகிய தயா மாஸ்டரையும் இராணுவத்தினர் கைது செய்திருந்தனர்.

பின்னர் இருவரையும் பிணையில் செல்ல நீதிமன்றத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஜார்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

மூலக்கதை