வெளிநாடுகளின் தேவைகளுக்காக கொள்கை வகுப்பதை எதிர்க்கிறோம்
வெளிநாடுகளின் தேவைகளுக்காக இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை வகுக்கப்படுவதை எதிர்க்கின்றோம். எமது நாட்டு மக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்தியதாகவே வெளிநாட்டுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என ஐ.ம.சு முன்னணி எம்.பி நாமல் ராஜபக் ஷ தெரிவித்தார்.
ஒரு வருடம் கழிந்தாவது “சீனாவின்” முக்கியத்துவம் தொடர்பாக பிரதமர் புரிந்து கொண்டிருப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மீதான பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக் ஷ எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எமது ஆட்சியில் மக்களினதும் நாட்டினதும் நன்மை கருதியே வெளிநாட்டுக் கொள்கைகள் ஏற்படுத்தப்பட்டன.
அதைவிடுத்து வெளிநாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் எமது நாடு வெளிநாட்டுக் கொள்கைகளை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் சில நாடுகளுடன் முரண்பாடுகள் ஏற்பட்டன. காரணம் இந் நாடுகளின் தேவைக்கு ஏற்ப எமக்கு கொள்கைகளை வகுக்க முடியாது என்பதேயாகும்.
அதேவேளை புதிய நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் போது எமக்கு உதவி புரிந்த சம்பிரதாய பூர்வமான நட்பு நாடுகளுடனான உறவுகளை கைவிட முடியாது.
இக் கொள்கையுடனேயே கடந்த ஆட்சியில் புதிய நாடுகளுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.
கடந்த காலங்களில் ஐ.தே. கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சீனாவை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் ஒரு வருடம் கழித்து சீனாவின் முக்கியத்துவம் தொடர்பாக பிரதமர் உணர்ந்துகொண்டுள்ளதோடு துறைமுக நகரம் மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பிரதமரின் புரிந்துகொள்ளல் தொடர்பாக வரவேற்கின்றோம் என்றும் நாமல் ராஜபக் ஷ எம்.பி தெரிவித்தார்.
2016-01-28