சட்டப்பேரவைத் தேர்தலில் பச்சைத் தமிழகம் கட்சி போட்டியிடும்: சுப.உதயகுமார்
Wednesday, 27 January 2016 09:00
சட்டப்பேரவைத் தேர்தலில் பச்சைத் தமிழகம் கட்சி போட்டியிடும் என்று அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர் சுப.உதயகுமார் கூறியுள்ளார்.
பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார், கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் என்று கூறினார். பல்வேறு மர்மங்கள் நிறைந்தது கூடங்குளம் அணுமின் நிலையம் என்றும் அவர் மேலும் கூறினார்.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பச்சைத் தமிழகம் கட்சி போட்டியிடும் என்று கூறியுள்ள உதயகுமார், முதல் அறிவிப்பாக அணுமின் நிலையம் அமைந்துள்ள ராதாபுரத்தில் பச்சைத் தமிழகம் சார்பில் வேட்பாளர் அறிமுகப் படுத்தப்படுவார் என்றும், பின்னர் தமிழகம் முழுவதும் பச்சைத் தமிழகம் சார்பில் அந்தந்த பகுதி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
தேர்தலில் ஜெயித்து எங்களது கோரிக்கைகளை சட்டப்பேரவையில் வைக்க எங்களது கட்சி ஆட்கள் செயல்படுவார்கள் என்றும் உதயகுமார் மேலும் கூறினார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.