சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் 270 பேர் விடுதலை – 130 பேரின் கதி என்ன?

கதிரவன்  கதிரவன்
சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் 270 பேர் விடுதலை – 130 பேரின் கதி என்ன?

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு முக்கிய நகரங்களை தங்களது பிடியில் வைத்து உள்ளனர். மேலும் அங்கு உள்ள மற்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

சிரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டெயிர் அல்-ஜோர் நகரை கைப்பற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஒரு வாரமாக சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து, ராணுவவீரர்கள் மற்றும் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த 16-ந்தேதி, அந்த நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர்கள், பெண்கள் உள்பட 400 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். தங்களது இயக்கத்துக்காக சண்டையிட ஆள் சேர்க்கும் பொருட்டு இது போன்ற மனித கடத்தலில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடத்தி செல்லப்பட்ட 400 பேரில், 270 பேரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு விடுதலை செய்து உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்களே முன்வந்து அவர்களை விடுவித்து உள்ளனர். ஆனால் கடத்தி செல்லப்பட்டவர்களில் மற்ற 130 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

இந்த தகவலை சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம், அதே நகரில் சிறை கைதிகள் 50 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் 14 முதல் 55 வரை வயதிலான ஆண்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

2016-01-21

மூலக்கதை