தேசிய வாக்காளர் தினம்: புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை- கவர்னர் நாளை வழங்குகிறார்

கதிரவன்  கதிரவன்
தேசிய வாக்காளர் தினம்: புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை கவர்னர் நாளை வழங்குகிறார்

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜனநாயக தேர்தல் முறைகளில் குடிமக்கள் தங்கள் பங்களிப்பை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்திய தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25-ந்தேதியை தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவேண்டும் என்று அறிவித்துள்ளது. 2011-ம் ஆண்டிலிருந்து இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதியை ஆறாவது தேசிய வாக்காளர் தினமாக மாநிலமெங்கும் கொண்டாட இருக்கிறோம்.

இதற்கான மாநில அளவிலான விழா, தமிழக கவர்னர் தலைமையில் நாளை காலை 11 மணி அளவில் கவர்னர் மாளிகையில் நடைபெறும். அவ்விழாவில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்கவைத்து கவர்னர் சிறப்புரையாற்றுவார். புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் அவர் வழங்குவார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பி.சீத்தாராமன், தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் உள்பட அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.

வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்றலின் முக்கியத்துவத்தையும், அதில் இளைஞர்களின் பங்கையும், ‘ஆர்வமான பங்களிப்புடன் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்றல்’ என்னும் மையக்கருத்தை உணர்த்தும் வகையில் இவ்விழாவில் பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அனைத்து வாக்காளர்களும் தங்களின் செல்போன் எண்ணிலிருந்து 1950 என்ற எண்ணிற்கு, தங்களின் வாக்காளர் அடையாள அட்டை நம்பரை குறிப்பிட்டு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வாக்காளர் தங்களின் செல்போன் நம்பரை பதிவு செய்வதின் மூலம், வாக்காளர் சேவை விவரங்களான, வாக்குச்சாவடி விவரம், வாக்காளர் விவரம் குறித்த தகவல்கள் வாக்காளரின் அந்த செல்போன் எண்ணிற்கு அவ்வப்போது அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2016-01-24

மூலக்கதை