பலரும் அறியாத சில்க் ஸ்மிதா எனும் கவர்ச்சி கன்னியின் கண்ணீர் பக்கங்கள்!!

கதிரவன்  கதிரவன்
பலரும் அறியாத சில்க் ஸ்மிதா எனும் கவர்ச்சி கன்னியின் கண்ணீர் பக்கங்கள்!!

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஏலூரு என்ற பகுதியில் பிறந்தவர் விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா. இவர் பிறந்த இடம் ஆந்திராவாக இருந்தாலும். இவரது பூர்வீகம் தமிழ்நாட்டின் கரூர் தான் என்று கூறப்படுகிறது.

1980-களில் இருந்து தனது மறைவு வரை தென்னிந்திய ஆண்களை தனது அழகாலும், கவர்ச்சியாலும் ஆட்டிப் படைத்தவர் சில்க் ஸ்மிதா என்று மட்டும் தான் பலருக்கு தெரியும். ஆனால், தனது ஆரம்பக் காலகட்ட வாழ்க்கையில் குழந்தை பருவத்தில் இருந்து திருமணம் வரை பல இன்னல்களை சந்தித்தவர் சில்க் ஸ்மிதா என்பது பலரும் அறியாதது.

விஜயலட்சுமியாக இருந்த போதிலும் சரி, சில்க் ஸ்மிதாவாக இருந்த போதிலும் சரி இன்பத்தை விட இன்னல்களும், சங்கடங்களும் மட்டுமே அதிகமாய் கண்டவர் சில்க் ஸ்மிதா…..

வறுமையின் காரணமாக தனது பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது சில்க் ஸ்மிதாவிற்கு.

பலதரப்பட்ட தொல்லைகள்
இவரது வசீகரமான தோற்றமே இவருக்கு தொல்லையாக மாறியது. ஏழ்மை எனும் காரணம் கொண்டு இவரை தீண்ட பலரும் முனைந்தனர். திரைக்கு வரும் முன் சிறு வயதிலேயே பல தொல்லைகளுக்கு ஆளானவர் விஜயலட்சுமி எனும் சில்க்.

பலதரப்பட்ட தொல்லைகளின் காரணமாக இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர் இவரது குடும்பத்தார். ஆனால், இவரது இல்லற வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. குடும்ப வாழ்கையில் ஏற்பட்ட துன்பத்தால் சென்னைக்கு ஓடிவந்தார்.

தனக்கென புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள சென்னைக்கு வந்து இவரது உறவினர் இல்லத்தில் தங்கி பிழைப்பு தேடி வந்தார் சில்க் ஸ்மிதா.

ஆரம்பத்தில் சினிமாவில் இரண்டாம் நிலை நடிகையாகவும், ஒப்பனை கலைஞராகவும் தான் தொடங்கினார் சில்க்.

திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான வினுசக்ரவர்த்தியின் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் விஜயலட்சுமி நடித்த பாத்திரத்தின் பெயர் “சில்க்”. மற்றும் இந்த படத்தில் இவரது இயற்பெயருக்கு பதிலாக ஸ்மிதா எனும் புனைப்பெயரோடு அறிமுகம் செய்யப்பட்டார். சில்க் மற்றும் ஸ்மிதா இணைந்து “சில்க் ஸ்மிதா” எனும் பெயர் இவருடன் ஒட்டிக் கொண்டது.

இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த புகழின் காரணமாக மலையாள தேசம் வரை இவரது புகழ் பரவியது. திறமை இருந்தும் இப்படத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தின் காரணமாக வேறு கதாப்பாத்திரங்களில் இவரால் நடிக்க முடியாமல் போயின.

வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். இவரது கவர்ச்சியான நடனம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

1980-களில் இவரது நடனம் இடம்பெறாத படமே இல்லை என்பது போல தான் இருந்தது. ரஜினியில் இருந்து கடைசிக்கட்ட நடிகர் வரை அனைவரின் படங்களிலும் இவர் இடம்பெறும் ஒரு பாடலாவது இருக்கும்.

இவருக்காகவும், இவர் இடம்பெறும் பாடல்களுக்காகவும் மட்டுமே ஓடிய படங்கள் ஏராளம் என திரையுலகினர் கூறுகிறார்கள்.

அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார். “லயனம்” என்ற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது. இப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு நடிப்பில் திறமை இருப்பினும் கூட ஊடகங்கள் இவரை ஓர் கவர்ச்சி கன்னியாக மட்டுமே வெளியுலகிற்கு எடுத்துக் காட்டின. அட்டைப்படங்களில் இவரது கவர்ச்சி படங்களை வைத்து தங்களது வியாபாரங்களை வளர்த்துக் கொண்ட இவர்கள். விஜயலட்சுமியின் திறமையை குறைத்துவிட்டனர்.

1996-ஆம் ஆண்டு சென்னையில் இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கிடந்தார் சில்க். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக செய்திகள் பரவின. இதற்கு காரணம் தயாரிப்பாளரக முயற்சித்த போது ஏற்பட்ட கடன் மற்றும் காதல் தோல்வி என்று கூறப்பட்டன.

மேலும், இவருக்கு இருந்த குடிப்பழக்கம், மன இறுக்கம் போன்றவையும் இவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இவருக்கு கொடுக்கப்பட்டு வந்து பாலியல் தொல்லைகள் தான் முக்கிய காரணம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவரது மரணத்தை சுற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன.

விஜயலட்சுமி எனும் சில்க்கின் வாழ்க்கையை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டு “தி டர்டி பிக்சர்” என்ற திரைப்படம் இந்தியில் வெளியானது. இத்திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படம் இவரது பிறந்தநாளான டிசம்பர் 2 அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

2015-11-09

மூலக்கதை