வங்காளதேசம்: இந்து வாலிபர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
டாக்கா, வங்காளதேச நாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா, அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி, உயிர் தப்பினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதன் பின்னர், பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். ஜூலை மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார். அவர் தலைநகர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இந்நிலையில், சில நாட்களாக சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் மத்தியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவருடைய மரணம் தொடர்ச்சியாக வங்காளதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதில், முன்னாள் கல்வி மந்திரி மொகிபுல் ஹசன் சவுத்ரியின் வீடு கொளுத்தப்பட்டது. வங்காளதேசத்தின் நிறுவன தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமானின் வீடும் சூறையாடப்பட்டது. இந்திய துணைத்தூதரின் வீடு மீதும் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இந்த சூழலில், வங்காளதேசத்தில் மைமன்சிங் நகரை சேர்ந்த திபு சந்திரதாஸ் (வயது 25) என்ற வாலிபர் துணி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். அவர், மத நிந்தனை செய்து விட்டார் என கூறி ஒரு கும்பல் அவருடைய ஆடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி, கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து கொலை செய்தது. இதன்பின்னர் அவருடைய உடலை சாலையில் போட்டு, தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆளும் இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதன்பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவி பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதுவரை 6 இந்துக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை மற்றும் உடல் எரிப்பு தொடர்பான வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 19 முதல் 46 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 7 பேரை விரைவு அதிரடி படையினரும், மீதமுள்ள 3 பேரை போலீசாரும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை தெற்கு ஹொபிர்பாரி பகுதியின் கரைதோலா மோர் என்ற இடத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஷேக் ஹசீனா பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அந்நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில், இந்து மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
