முதல்-மந்திரி பதவி விவகாரம்: டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து

  தினத்தந்தி
முதல்மந்திரி பதவி விவகாரம்: டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து

பெங்களூரு, கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில் இறுதியில் சித்தராமையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். முதல்-மந்திரி பதவியை 2 பேரும் ஆளுக்கு 2½ ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சித்தராமையா ஆட்சி அதிகாரத்தில் 2½ ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் முதல்-மந்திரி பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திடீரென போர்க்கொடி தூக்கினார். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. ஒரு வாரம் குழப்பம் நீடித்த நிலையில் காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி சித்தராமையா வீட்டில் டி.கே.சிவக்குமார் சிற்றுண்டி கூட்டத்தில் கலந்துகொண்டார். தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று 2 பேரும் விளக்கம் அளித்தனர். இதன்மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தனது வீட்டிற்கு சிற்றுண்டி விருந்துக்கு வருமாறு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தநிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, சித்தராமையா சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டிற்கு வருகை தந்தார். அவரை சிவகுமார் மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் வரவேற்றனர். இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில், “காங்கிரஸ் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நல்லாட்சி மற்றும் நமது மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, இன்று எனது இல்லத்தில் முதல்-மந்திரிக்கு காலை உணவை அளித்தேன்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு மிகவும் பிடித்தமான நாட்டு கோழி குழம்பு, ராகி உருண்டை உள்ளிட்டவை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிட முடிவை இருவரும் ஏற்போம் என்று ஏற்கனவே சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Hosted the Hon’ble CM for breakfast at my residence today as we reaffirm our commitment to good governance and the continued development of our state under the Congress vision. pic.twitter.com/qmBxr50S64

மூலக்கதை