கடந்த மாதத்தில் டிஜிட்டல் தங்கம் விற்பனை 61 சதவீதம் குறைந்தது

  தினத்தந்தி
கடந்த மாதத்தில் டிஜிட்டல் தங்கம் விற்பனை 61 சதவீதம் குறைந்தது

புதுடெல்லி,தங்கத்தின் மீதான நாட்டு மக்களின் முதலீடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்தாலும் பொருளாதாரத நிச்சயமற்ற சூழலில் நம்பகமான முதலீடாக கருதப்படுவதால் தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் விற்பனை குறைந்தபாடில்லாமல் நீடித்து வருகிறது. விலை உயர்வால் தங்கத்திற்கு மாற்றாக டிஜிட்டல் முறையில் தங்கம் விற்கப்பட்டது. பல்வேறு முன்னணி பண பரிவர்த்தனை நிறுவனங்கள் தவிர்த்து புற்றீசல் போல பல நிறுவனங்கள் இதற்காக முளைத்து டிஜிட்டல் தங்கம் என்ற பெயரில் விற்றன. ஒரு மில்லிகிராம் தொடங்கி கிலோ கணக்கில் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப தங்கம் வாங்குவதற்கான எளிய வழிமுறைகள், விருப்பத்தேர்வுகள் உள்ளதால் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் டிஜிட்டல் தங்கத்தின் விற்பனை ரூ.1,410 கோடியாக இருந்தது. இதனிடையே டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது, வாங்குவது ஆபத்தானது என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர். மேலும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) டிஜிட்டல் தங்கத்திற்கான விற்பனைக்கு உரிய அங்கீகாரம் விதிக்கப்படவில்லை என அறிவித்தது. இதனால் பொதுமக்கள் உஷார் அடைந்தனர். அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. அதன்படி கடந்த அக்டோபர் மாதத்தில் டிஜிட்டல் தங்கம் விற்பனை கிடுகிடுவென சரிந்தது. இதுகுறித்து வெளியான தகவலில் நாட்டின் டிஜிட்டல் தங்கம் விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.550 கோடியாக குறைந்தது. இது அதற்கு முந்தைய மாதத்தைவிட 61 சதவீதம் குறைவாகும். முறைப்படுத்தாத நிறுவனங்கள் மூலம் டிஜிட்டல் தங்கம் விற்பனையை சீரமைக்கும் முயற்சிகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை