உலக கோப்பையை கைப்பற்றியாச்சு; இனி லெவலே வேற... வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு

  தினத்தந்தி
உலக கோப்பையை கைப்பற்றியாச்சு; இனி லெவலே வேற... வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு

புதுடெல்லி, 8 அணிகள் பங்கேற்ற 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி தொடங்கி நடந்தது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்திய வீராங்கனைகள் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி பாராட்டுகளை பெற்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இறுதி போட்டியில், தென்ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு பின்னர், வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது. இதுபற்றி வெளிவந்து உள்ள தகவலில், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா ஆகியோரின் சமூக ஊடக கணக்குகளை பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுதவிர, அவர்களின் பிராண்ட் மதிப்பும் கூடியுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில், 127 (நாட் அவுட்) ரன்களை குவித்த ஜெமிமாவின் விளம்பர மதிப்பு 100 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதுபற்றி ஜெமிமாவுக்கான விளம்பரங்களை நிர்வகிக்க கூடிய ஏஜென்சியை சேர்ந்த தலைமை வர்த்தக அதிகாரியான கரண் யாதவ் கூறும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி முடிந்ததுமே உடனடியாக எங்களுக்கு கோரிக்கைகள் வந்து குவிந்து விட்டன. 10 முதல் 12 பிரிவுகளை சேர்ந்த விளம்பர நிறுவனங்களுடன் நாங்கள் பேசி வருகிறோம் என்றார். இதனால், விளம்பர வருவாயை ரூ.75 லட்சம் என்பதில் இருந்து ரூ.1.5 கோடி என்ற அளவுக்கு ஜெமிமா உயர்த்தி விட்டார். இது அந்நிறுவனத்துடனான நீண்டகால தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப மாறுபடும். நாட்டிலேயே அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா (வயது 25) ஏற்கனவே 16 நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக உள்ளார். அவற்றில் நைக், ஹுண்டாய், எஸ்.பி.ஐ. உள்ளிட்டவையும் அடங்கும். இதன் மூலம் அவர் ஒரு நிறுவனத்திடம் இருந்து வருவாயாக ரூ.1.5 முதல் 2 கோடி வரை பெறுகிறார். இனி இவர்களை கையில் பிடிக்க முடியாது என்ற அளவுக்கு உலக கோப்பை வெற்றி அவர்களை உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது.

மூலக்கதை