வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி பேரணி

  தினத்தந்தி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி பேரணி

கொல்கத்தா,இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் ’வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்தல் கமிஷனின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.தமிழ்நாட்டில் திமுக இவ்விவகாரம் தொடர்பாக ’அனைத்துக் கட்சி கூட்டத்தை’ கூட்டியது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. இதன்படி, திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதுபோல, மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.மேற்கு வங்காள அமைச்சர்கள், திரிணமூல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர். அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அபிஷேக் பானர்ஜி பேசுகையில், “இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டெல்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பாஜக கண்டிப்பாக யோசித்து பார்க்க வேண்டும். டெல்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்,” என்றார்.

மூலக்கதை