45 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

  தினத்தந்தி
45 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

காசா, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 68 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த மாதம் 10-ந்தேதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஹமாஸ் தங்கள் வசம் உயிருடன் இருந்த 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. மேலும், கொல்லப்பட்ட 28 பணய கைதிகளில் 17 பேரின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. இன்னும் 11 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவிடம் உள்ளன. இதனை தொடர்ந்து ஒப்பந்தப்படி இஸ்ரேல் தங்கள் பிடியில் உள்ள பாலஸ்தீனிய சிறைக்கைதிகள் (ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட) பலரையும் விடுதலை செய்து வருகிறது. மேலும், உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் உடல்களும் ஒப்படைக்கப்படு வருகின்றன. நேற்றை அந்த வகையில் இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் இன்று ஒப்படைத்துள்ளது. காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுகாதாரத்துறையிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 3 இஸ்ரேலியர்களின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை