ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் - அமித்ஷா

புதுடெல்லி, திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி தரும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் கல்விப் பொருட்களின் ஜி.எஸ்.டி. விகிதங்களில் ஏற்பட்டுள்ள முக்கியமான குறைப்பு, நடுத்தர மக்களின் வருமானத்தை அதிகரிக்கும். மேலும், இன்னும் அதிகமாக சேமிக்க அவர்களை ஊக்குவிக்கும். ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி தரும் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிக்கு ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் ஒரு சான்றாகும். புதிய சீர்திருத்தம், பல்வேறு வகையான பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைத்ததுடன், மக்களின் செலவினங்களை மேலும் குறைக்கும். மேலும் உலகின் மிகவும் வளமான நாடாக மாறும் பாதையில் இந்தியா இன்னும் வேகமாக செல்லும். ஏழைகள், விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மோடியின் உறுதிக்கு அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் சான்றாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
