இணைய மோசடியின் மையமாக மாறும் இலங்கை - 1000க்கும் மேற்பட்டோர் கைது - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இணைய மோசடியின் மையமாக மாறும் இலங்கை  1000க்கும் மேற்பட்டோர் கைது  லங்காசிறி நியூஸ்

கம்போடியாவிற்கு பின்னர், இணைய மோசடிகளின் மையமாக இலங்கைக்கு மாற்றியுள்ளது. வெளிநாட்டு வேலை என இந்திய இளைஞர்களை கம்போடியாவிற்கு அழைத்து, அங்கு அவர்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக்கொண்டு, இணைய மோசடி குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்துள்ளனர்.  இதில் ஏராளமானோரை மீட்டு இந்திய அரசு, இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளது. பல நாடுகளின் அழுத்தம் காரணமாக இணைய மோசடி குற்றவாளிகள் மீது கம்போடியா அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக ,இந்த இணைய மோசடி கும்பல்கள் தங்களது தளத்தை இலங்கைக்கு மாற்றியுள்ளது.  விசாவுக்கான தேவை இல்லாத பயணம், கட்டட இட வசதி, தொலைத்தொடர்பு வசதி, முறைசாரா பணப்பரிமாற்ற முறை ஆகிய காரணங்களால் இலங்கை, மோசடிக்காரர்களை ஈர்க்கக்கூடிய இடமாக மாறுவதாகப் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இலங்கையின் புதிய இணைய குற்றத்தடுப்பு பிரிவு, 2026 ஆம் ஆண்டில் 5 மாதங்களில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட இணைய மோசடியாளர்களை கைது செய்துள்ளது.  கடந்த 2024ஆம் ஆண்டு முழுவதுமே இந்த குற்றச்சாட்டில் 430 பேர் மட்டுமே கைதாகியிருந்தனர். மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தென் இலங்கையில் நடத்தப்பட்ட 5 அதிரடிச் சோதனைகளில் 173 முதல் 192 வரையான இந்திய குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி பகுதியில் மட்டும் இரு விடுதிகளில் 110 இந்தியர்களும், மிதிகமவில் 28 பேரும், ஹிக்கடுவவில் 35 பேரும் கைதாகியுள்ளனர். மார்ச் மாதத்தில் மிகிந்தலை மற்றும் அனுராதபுரத்தில் ஒரே நாளில் 135 சீன குடிமக்களும், ஏப்ரல் தொடக்கத்தில் சிலாபத்தில் 133 சீனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுடன் நேபாளம், வியட்நாம் மியான்மர், பிலிப்பின்ஸ், மலேசியா, தைவான், இந்தோனீசியா (77 பேர்) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகளை தவிர்த்து ஹொட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றுக்கும் இந்த கும்பல் இடம் மாறுகிறது ஏனெனில் இவற்றை விரைவாக வாடகைக்கு எடுக்கவும், அதே வேகத்தில் கைவிட்டுச் செல்லவும் முடியும். இலங்கையில் பல உட்கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வரும் நிலையில், அந்த பணிக்கு வரும் சீனர்கள் மோசடியாளர்களுடன் கைகோர்த்து இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கைதான சீனர்கள் சிலர், சீன தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சீனாவும், இலங்கையும் கூட்டுச் சட்ட அமலாக்க முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த மோசடிகளை தடுக்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ள இலங்கை, 'சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தில்' (UN Cybercrime Convention) முறைப்படி கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அமைச்சர் எரங்க வீரரத்ன, "இலங்கை சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாள்வதற்குப் போதுமான சட்டங்கள் நாட்டில் இல்லை. தற்போதைய சட்டத்தில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டு, இதை நிவர்த்தி செய்ய 2 புதிய சட்டமூலங்கள் அவசரமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டவிதிகளுக்கு அமைய செயற்படத் தவறும் நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சைபர் பாதுகாப்புத் தயார்நிலை உத்திகளை வருடாந்தரம் நடைமுறைப்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என கூறியுள்ளார்.     

மூலக்கதை