நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.

  வலைத்தமிழ்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நடத்திய சமீபத்திய ஆய்வில், நிலவின் துருவங்களில் உறைபனி இருப்பதற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

 

இந்த சமீபத்திய ஆய்வின்படி, நிலவின் துருவங்களில் இருக்கும் பள்ளங்களில், மேற்பரப்பில் இருப்பதைவிட இரண்டு மீட்டர்கள் வரை தோண்டினால் இருக்கும் உறைபனி ஐந்து முதல் எட்டு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

மேலும், நிலவின் தென்துருவத்தில் இருப்பதைவிட வட துருவத்தில் இரண்டு மடங்கு உறைபனி இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிப்பதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இஸ்ரோவுடன், ஐ.ஐ.டி கான்பூர், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக் கழகம், ஜெட் புரொபல்ஷன் ஆய்வகம், மற்றும் ஐ.ஐ.டி தன்பாத் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

 

இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலவின் மேற்பரப்பைத் தோண்டி இந்த உறைபனியை வெளியே எடுத்தால், அது எதிர்காலத்தில் நிலாவில் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கும், நிலாவில் மனிதர்கள் நீண்டகாலம் தங்குவதற்கும் இன்றியமையாததாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை