பென்சில்வேனியாவில் கவர்னரின் வீட்டுக்கு தீ வைப்பு- ஒருவர் கைது

  தினத்தந்தி
பென்சில்வேனியாவில் கவர்னரின் வீட்டுக்கு தீ வைப்பு ஒருவர் கைது

வாஷிங்டன்:அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில கவர்னராக பதவி வகித்து வருபவர் ஜோஷ் ஷபிரோ (வயது 51). ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவரான இவரது அதிகாரப்பூர்வ இல்லம் ஹாரிஸ்பர்க் நகரில் உள்ளது. இந்த வீட்டில்தான் அவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், கவர்னரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் தீ வைத்துள்ளார். தீ மளமளவென வீட்டின் பல்வேறு இடங்களுக்கும் பரவியது. அப்போது கவர்னர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை தட்டி எழுப்பி அவர்களை வெளியேற்றி காப்பாற்றினர்.தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். எனினும் வீட்டின் பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. வீட்டின் ஒரு பகுதியும் கடுமையாக சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் கோடி பால்மர் (வயது 38) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கொலை முயற்சி, பயங்கரவாதம், தீவைப்பு, மோசமான தாக்குதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியிருக்கிறார். தாக்குதல் குறித்து கவர்னர் ஷபிரோ கூறியதாவது:போலீசார் அதிகாலை 2 மணியளவில் வந்து கதவை தட்டி எழுப்பி வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இதுபோன்ற வன்முறை நம் சமூகத்தில் மிகவும் சாதாரணமாகி வருகிறது. வன்முறை எந்த பகுதியில் நடந்தாலும் அது சரியல்ல. தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தாக்குதலுக்கு நான் அஞ்ச மாட்டேன். எனது கடமையை தொடர்ந்து செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.2022-ம் ஆண்டு டிரம்பின் ஆதரவு பெற்ற தீவிர வலதுசாரி வேட்பாளருக்கு எதிரான போட்டியில் ஷபிரோ வெற்றிபெற்று பென்சில்வேனியாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2028 தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக இவர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கவர்னரின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்திற்கு துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் குடியரசு கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை