இலங்கையில் ஆடுகளம் நடிகர் கைது

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
இலங்கையில் ஆடுகளம் நடிகர் கைது

இலங்கையில் விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக நடிகர் ஜெயபாலன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டை காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார்.

மேலும் வெயில், ஆடுகளம், பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவரது தாயாரின் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார்.

மாங்குளம் சென்ற அவர் தன் தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நேற்று மாலை 5 மணி அளவில் கவிஞர் ஜெயபாலனை இலங்கை பொலிசார் சுற்றி வளைத்தனர். விசா விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை கைது செய்தனர்.

கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். எந்த அடிப்படையில் அவர் விசா விதிகளை மீறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை இலங்கை பொலிசாரின் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன் பிறகு ஜெயபாலனை சிங்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர்–  சிங்களர் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக சிங்கள உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மூலக்கதை