இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
அதற்கமைய இன்று வனாத்தவில்லு, ஒத்தப்புவ, சியம்பலகஸ்வெவ, கட்டமுறிச்சான, ரம்பேவ மற்றும் மீகஸ்வெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது.
இதன் காரணமாக குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படும்படியும் அதிகளவான நீர் அருந்துமாறும் அத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மற்றும் மேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் கூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.