ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டம்!

புருனேவில் ஒருபால் உறவுக்காரர்கள் உறவு கொண்டாலோ, திருமணத்தை தாண்டி உறவு வைத்து கொண்டாலோ கல்லால் அடித்துக் கொல்லப்படும் என்ற கடுமையான இஸ்லாமிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
 
புருனேவின் ஒருபால் உறவுக்காரர்கள் இந்த தீர்ப்பு குறித்து அதிர்ச்சியும் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். வலுவான இஸ்லாமிய போதனைகள் குறித்து அந்த நாட்டின் சுல்தான் மக்களிடம் உரையாடினார்.
 
புரூனேவில் ஒரின சேர்க்கை சட்ட விரோதமானது அதில் ஈடுபட்டால் 10 வருடம் வரை சிறைதண்டனைகள் வழங்கப்படலாம்.
 
புரூனேவின் மக்கள் தொகையில் இரண்டில் மூன்று பங்கு முஸ்லிம் மக்கள். சுமார் 4 லட்சத்து இருபதாயிரம் பேர் உள்ளனர். புரூனேயில் மரண தண்டனை நடைமுறையில் ஏற்கனவே உள்ளது ஆனால் 1957ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனை யாருக்கும் வழங்கப்படவில்லை.
 
குற்றவியல் சட்டத்தின்படி என்ன தண்டனைகளை வழங்க முடியும்?
 
இந்த சட்டம் புரூனேவின் முஸ்லிம்களுக்கு பொருந்தும். வயது வந்த குழந்தைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும். சில வழிகளில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
 
பாலியல் வல்லுறவு, திருமண உறவுக்கு அப்பால் உறவு கொள்வது, ஆண்கள் இருவர் உறவுக் கொள்வது, திருட்டு மற்றும் நபிகள் நாயகத்தை தவறாக பேசுவது ஆகியவற்றுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
 
பெண்கள் இருவர் உறவு கொண்டால் 40 சவுக்கடிகள் வழங்கப்படும் அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.
 
திருட்டுக்கான தண்டனை, உறுப்புகள் துண்டிக்கப்படும்.
 
இஸ்லாம் மதத்தை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இஸ்லாம் அல்லாத மதத்தின் போதனைகளை வழங்கினாலோ அவர்களை மதம் மாற்ற முயற்சித்தாலோ அபராதம் அல்லது ஜெயில் தண்டனை வழங்கப்படும்.
 
வயதுக்கு வராத சிறுவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு சவுக்கடிகள் வழங்கப்படும்.
 
தற்போது அமல்படுத்தப்பட்ட கடுமையான சட்டத்தால், பிரிட்டனின் அபீடீன் பல்கலைக்கழகம், சுல்தான் ஹசானலுக்கு வழங்கிய கெளவர பட்டம் மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
 
இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு புரூனேவில் ஷரியா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த சமயம் பொதுவான சட்டமும் அமலில் இருந்தது. எனவே இரட்டை சட்டமுறை அமலில் இருந்தது.
 
"நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருப்பதால் அங்கு கலவரங்கள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது எனவே தற்போது இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது." என புரூனேவில் மனித உரிமைக் குழுவின் நிறுவனர் மாத்யூ வூல்ஃபி தெரிவித்துள்ளார்.
 
40 வயது ஒரின சேர்க்கையாளர் ஒருவர், தற்போது கனடாவில் தஞ்சம் கோரிகிறார்.
 
தற்போது புதியதாக அமல் படுத்தப்பட்டுள்ள குற்றவியல் சட்டம் ஏற்கனவே இருப்பது போன்றே தான் உணருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு அரசாங்கத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்ட கருத்துக்கு அவர்மீது தேச துரோக வழக்கு சுமத்தப்பட்டது.
 
புரூனேவில் ஒருபால் உறவுக்காரர்கள் எப்போதும் வெளிப்படையாக இருந்தது இல்லை ஆனால் அவர்களுக்கென ஒரு டேடிங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதனை பயன்படுத்தவும் மக்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
 
ஆனால் மற்றொரு ஒருபால் உறவுக்காரர் இந்த சட்டம் பரவலாக அமல்படுத்தப்படமாட்டாது என நம்புவதாகவும், தான் இதுகுறித்து அஞ்சவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை