மீனவர்களுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை
ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட மீனவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அதிமுக இருபிரிவனரும் கபட நாடகம் நடத்தி வருகின்றனர் என சாடியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல முனைப் போட்டிகள் நிலவி வரும் இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக களமிறங்குகிறது. அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என இரு பிரிவுகளாக களம் காணும் அக்கட்சியினரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
அதேபோல், திமுக சார்பில் மருதுகனேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை முன்னிலைப்படுத்தி வெற்றி பெற்று விட வேண்டும் என அக்கட்சியினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட மீனவர்களுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், அதிமுக இருபிரிவனரும் கபட நாடகம் நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமானல் திமுக ஜெயிக்க வேண்டும். தொகுதி மக்களை சந்தித்து குறைகளை தீர்போம் என உறுதி கொடுக்கிறேன் என்றார்.