நாளை 79-வது சுதந்திர தின விழா: உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் டெல்லி

  தினத்தந்தி
நாளை 79வது சுதந்திர தின விழா: உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் டெல்லி

புதுடெல்லி, நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேசிய தலைநகர் டெல்லியில், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டம் மிக முக்கியமானது ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் கொடியேற்றி வைக்கிறார். அதன்படி இந்த ஆண்டும் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார். தொடர்ச்சியாக 12-வது முறையாக அவர் கொடியேற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இவர் கொடியேற்றியபோது, தொடர்ந்து 10 முறை கொடியேற்றி இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் சாதனையை முறியடித்து இருந்தார். தற்போது 12-வது முறையாக கொடியேற்றி இந்திராகாந்தி மற்றும் நேருவின் சாதனையை நெருங்க இருக்கிறார். அவர்கள் முறையே 16 மற்றும் 17 ஆண்டுகளாக தொடர்ந்து கொடியேற்றி இருந்தனர். சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7.30 மணிக்கு தொடங்கும். பிரதமர் மோடி காலையில் அங்கு வரும்போது நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இணை மந்திரி சஞ்சய் சேட் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் வரவேற்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பிரதமர் காவல் பணியாளர்கள் குழுமியுள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். அப்போது வழக்கமான சம்பிரதாயப்படி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கும். அதனைத்தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இந்த விழாவை முன்னிட்டு செங்கோட்டையின் முழு கட்டுப்பாடும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று அங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இங்கு மட்டுமல்ல, இந்தியா கேட் போன்ற சில இடங்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. செங்கோட்டையைச் சுற்றிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் டிரோன்கள் பறக்க முடியாது. சிறுவர்கள் காற்றாடிகள் (பட்டம்) விட முடியாது. இதைப்போல ராட்சத பலூன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. டெல்லிக்குள் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டு விடக்கூடாது எனக்கருதி வணிக நோக்கத்துக்காக இயங்கும் வாகனங்களின் நுழைவுக்கு நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக டெல்லி மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் நியமிக்கப்படுகிறார்கள். போக்குவரத்து பணிகளுக்காக 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது தவிர மத்திய ஆயுதப்படையினர் உள்ளிட்ட துணை ராணுவப்படையினர் சுமார் 2 ஆயிரம் பேர் செங்கோட்டை மற்றும் பிற இடங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். மொத்தம் 15 ஆயிரம் காவல் பணியாளர்கள் பல பிரிவுகளாக பாதுகாப்பை மேற்கொள்ள இருக்கிறார்கள். பாதுகாப்பின் ஒரு அம்சமாக டெல்லி விமான நிலையத்தில், பட்டியலிடப்படாத விமானங்களுக்கு காலையிலும், மாலையிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மூலக்கதை