பிரிட்டிஷ் கால பள்ளி கட்டடம் இடிந்து விழும் அபாயம்: பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை

தினமலர்  தினமலர்
பிரிட்டிஷ் கால பள்ளி கட்டடம் இடிந்து விழும் அபாயம்: பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நினைவு சின்னமாக உள்ள, 90 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் காலத்து கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பரவளூர், சின்னகண்டியங்குப்பம், எருமனுார், சின்னவடவாடி, கார்குடல், ஆலிச்சிக்குடி, சொட்டவனம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்த பள்ளி வளாகத்தில் 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது.

இங்கு, துவக்க காலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரி செயல்பட்டு வந்துள்ளது. கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டியதும், அங்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியாக மாற்றப்பட்டு, தற்போது வரை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

பள்ளி வளாகத்தில் இருந்த பெரும்பாலன பழைய வகுப்பறை கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன.

ஆனால், பள்ளி நுழைவு வாயில் முன்பு உள்ள பிரிட்டிஷ் காலத்து கட்டடத்தில், தற்போது தலைமையாசிரியர் அறை, நுாலகம், ஆவணங்களை பாதுகாக்கும் அறைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கட்டடம் கட்டி 90 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

ஆனால், கட்டடம் பராமரிப்பின்றி உள்ளதால், கட்டத்தின் மேல் உள்ள ஓடுகள் ஆங்காங்கே உடைந்து சேதமடைந்துள்ளன. மேலும், தரைதளம், கட்டட சுவர்களில் காரைகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

இதனால், மழைக்காலங்களில் நுாலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரிய வகை புத்தகங்கள், மற்றும் ஆவணங்கள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கட்டடம் பராமரிப்பின்றி உள்ளதால், நாளுக்குநாள் பலமிழந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது.

எனவே, பழுதடைந்துள்ள கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க பள்ளி கல்வி துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நீதிபதி உள்ளிட்ட உயரிய பொறுப்புகளில் இருந்துள்ளனர். முன்னாள் மாணவர்கள் தங்களின் நினைவுகளை புதுப்பிக்கும் ஐகானாக இந்த கட்டடம் உள்ளது. பள்ளிக்கு வரும் முன்னாள் மாணவர்கள் பலர் இந்த கட்டடத்தின் முன் நின்று செல்பி எடுத்து செல்வதை வழக்கமான கொண்டுள்ளனர்.எனவே, பள்ளியின் நினைவு சின்னமாக உள்ள பிரிட்டிஷ் காலத்து கட்டடத்தை, பழமை மாறாமல் சீரமைக்க, அரசுடன் இணைந்து, முன்னாள் மாணவர்களும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.



விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நினைவு சின்னமாக உள்ள, 90 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் காலத்து கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க, அதிகாரிகள் நடவடிக்கை

மூலக்கதை