திரிபுரா மொழிப்பாட தேர்வு சர்ச்சை மாணவர்கள் காலவரையற்ற போராட்டம்

தினமலர்  தினமலர்
திரிபுரா மொழிப்பாட தேர்வு சர்ச்சை மாணவர்கள் காலவரையற்ற போராட்டம்



அகர்தலா, திரிபுராவில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், கோக்போராக் மொழிப் பாட தேர்வை ஆங்கிலத்தில் எழுத திரிபுரா இடைநிலைக்கல்வி வாரியம் அனுமதி மறுத்ததை அடுத்து, அம்மாநில மாணவர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வுகள் மார்ச் 1ல் துவங்குகின்றன.

இங்குள்ள பழங்குடியின மக்களின் அதிகாரப்பூர்வ மொழியான கோக்போராக் மொழிக்கான பாடத் தேர்வை 5,000 மாணவர்கள் எழுதவுள்ளனர். இந்த மொழிக்கு முழுமையான எழுத்து வடிவம் இல்லை.

இதனால் இந்த தேர்வை, வங்க மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் எழுதினால் அதை மதிப்பீடு செய்ய போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை என்றும் திரிபுரா இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்தது.

எனவே, கோக்போராக் மொழி தேர்வை வங்க மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் மாநில சட்டசபையில் எதிரொலித்தது. மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திப்ரா மோத்தா கட்சியினர், அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்கட்சியின் திப்ரா பழங்குடியின மாணவர் கூட்டமைப்பு காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் சாலை மற்றும் ரயில் மறியலில் நேற்று ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று துவங்கிய பல்கலை தேர்வுகள் அனைத்தும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாணவர் அமைப்பினர் கூறுகையில், 'இந்த தேர்வை ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் நடத்துவோம்' என, தெரிவித்தனர்.

அகர்தலா, திரிபுராவில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், கோக்போராக் மொழிப் பாட தேர்வை ஆங்கிலத்தில் எழுத திரிபுரா இடைநிலைக்கல்வி வாரியம் அனுமதி மறுத்ததை அடுத்து, அம்மாநில மாணவர்

மூலக்கதை