ஓட்டுநர் உரிமம் பெற 'பேஸ்லெஸ்' முறை அறிமுகத்தால் ஆர்.டி.ஓ., அலுவலக நடைமுறையால் தவிக்கும் மக்கள்

தினமலர்  தினமலர்
ஓட்டுநர் உரிமம் பெற பேஸ்லெஸ் முறை அறிமுகத்தால் ஆர்.டி.ஓ., அலுவலக நடைமுறையால் தவிக்கும் மக்கள்

மதுரை- ஓட்டுனர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மீண்டும் 'பேஸ்லெஸ்' முறையில் விண்ணப்பிக்க வலியுறுத்துவதால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கொரோனா காலத்தில் தற்காலிக ஓட்டுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) பெற 'பேஸ்லெஸ்' (ஆட்கள் வராமல் எல்.எல்.ஆர்., பெறுவது) என்ற புதிய நடைமுறை அறிமுகமானது.

கொரோனாவுக்கு பின்பு 'பேஸ்லெஸ்' மற்றும் வழக்கமான 'நான் பேஸ்லெஸ்' நடைமுறை இருந்தது. இதனால் தடையின்றி அனைவரும் எல்.எல்.ஆர்., பெற்றனர். சில நாட்களாக மீண்டும் 'பேஸ்லெஸ்' முறையை மட்டும் மதுரை மண்டலத்தில் அமல்படுத்தி உள்ளனர்.

மீண்டும் புதிய நடைமுறை



இம்முறையில் ஆர்.டி.ஓ., எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லுாரி படிப்பு, வேலைவாய்ப்பு என பலரும் வெளிமாவட்டத்தினர் உள்ளனர். இப்புதிய முறையால் வெளிமாவட்டத்தினர் எல்.எல்.ஆர்., பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் விண்ணப்பதாரரும், ஆதார் அட்டையில் சிறு மாறுதல் இருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது. 40 வயதை கடந்தவர்கள் எல்.எல்.ஆர்., பெற மருத்துவ சான்று இணைக்க வேண்டும். அதனை இணைக்கும் வசதி இம்முறையில் இல்லாததால் அவர்களும் பாதிக்கின்றனர்.

அதேபோல ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கும் 'பேஸ்லெஸ்' முறையில் விண்ணப்பிக்கும்படி வலியுறுத்துகின்றனர். எவ்வித அறிவிப்பும் இன்றி மதுரையில் மட்டும் திடீரென இம்முறையை அறிமுகப்படுத்தியதால் பலர் பேஸ்லெஸ் அல்லாத முறையில் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களை மீண்டும் பேஸ்லெஸ் முறையில் விண்ணப்பிக்க கட்டாயப்படுத்துவதால் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற இயலாமல் தவிக்கின்றனர்.

மன உளைச்சலாக உள்ளது



ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் நல்லுசாமி கூறியதாவது: தமிழகத்தில் வேறு எந்த மண்டலத்திலும் இம்முறை இல்லை. இதனை அரசு அறிவித்ததாக தெரியவில்லை. சமீபத்தில் போக்குவரத்து கமிஷனர் மதுரை வந்தபோது இந்நடைமுறையை அமல்படுத்தும்படி வலியுறுத்தியுள்ளார். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். இதுவரை கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தோரும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் மனஉளைச்சலில் உள்ளனர்.

ஏற்கனவே அரசு பேஸ்லெஸ் மற்றும் நான் பேஸ்லெஸ் என இருமுறையிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து இருந்தது. அதனை இந்த நடைமுறை மாற்றிவிட்டது, என்றார்.

அதிகாரிகள் கூறுகையில், ''ஒருவரே பல முகவரிகளில் அடையாள அட்டைகளை வைத்துள்ளனர்.

இதை தவிர்க்க மத்திய அரசே இப்புதிய முறையை வலியுறுத்தியுள்ளது. இதுபற்றி ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில நடைமுறை சிக்கல் இருக்கலாம். அது சரிசெய்யப்படும்'' என்றனர்.

மதுரை- ஓட்டுனர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மீண்டும் 'பேஸ்லெஸ்' முறையில் விண்ணப்பிக்க வலியுறுத்துவதால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.வட்டார

மூலக்கதை