ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் போராட்டம்

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட நாடுகளில் போராட்டம்

லண்டன்,

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஆகிய ஊர்களிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இதனால் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவரக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர். குறிப்பாக அலங்காநல்லூரில் கடந்த 3 நாட்களாக போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. இரவு நேரத்திலும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரையிலும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரக்கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஐ.டி. ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

சமூக ஊடகங்கள் மூலம் தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டதால் இந்த போராட்டம் தற்போது உலக நாடுகளுக்கும் பரவி இருக்கிறது.  தவிர, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தமிழ் சங்கங்கள் அங்குள்ள மக்களிடம் ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதுபோன்ற போராட்டங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷியா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் இலங்கை உள்ளிட்ட 10&க்கும் மேற்பட்ட நாடுகளில் நடந்தன.

அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நியூயார்க், ஜார்ஜியா, வாஷிங்டன் டி.சி. நியூஜெர்சி, பால்டிமோர், மிச்சிகன், மினசோட்டா, ஓஹாயோ, மினசோட்டா, நெப்ராஸ்கா, டெக்சாஸ், சியாட்டில், சான்பிரான்சிஸ்கோ ஆகிய மாகாணங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உரத்த குரலுடன் எழுப்பினர். அவர்கள் ஜல்லிக்கட்டை காப்போம், எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற பதாகைகளையும் ஏந்தி இருந்தனர். பீட்டா அமைப்பை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடுமையாக குளிர் வீசினாலும் கூட அதையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அட்லாண்டா, டெட்ராய்ட், கொலம்பஸ், சியாட்டில், தெற்கு ஆஸ்டின், சான் அண்டோனியோ, மினியாபொலிஸ் நகரங்களில் நடந்த போராட்டங்களில் 250 முதல் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இவர்களில் பலர் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி அணிந்து வந்திருந்தனர். டல்லாஸ் நகர தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அட்லாண்டா நகரில் தமிழர்கள் குடும்பமாக திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இந்திய தூதரக அதிகாரி நாகேஷ் சிங்கை சந்தித்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு மனுவும் கொடுத்தனர்.  இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மூலக்கதை