ஜல்லிக்கட்டுக்காக அமைதிப் போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டம் போல...

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டுக்காக அமைதிப் போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டம் போல...


சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள மின்னஞ்சல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-  

தமிழ்நாடு எங்கும் கொழுந்து விட்டு எரிகின்ற பிரச்சினையாக உருவெடுத்து விட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் கள நிலைமையைத் தங்கள் உடனடி கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். கடந்த ஒரு மாத காலமாகவே, தமிழ்நாட்டில் விவசாயிகள், குறிப்பாக இளைஞர்கள், அதிலும் குறிப்பாக மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டியின் மீது உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு தக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2016 டிசம்பர் 15&ந் தேதி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தங்களைச் சந்தித்து, ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு குறித்து விரிவாக விளக்கினேன். இந்த விளையாட்டு, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்களின் கலாசார நிகழ்வாக நடத்தப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளில் விவசாயிகள், தங்கள் பிள்ளைகளைப் போல பராமரிக்கின்றார்கள். ஜல்லிக்கட்டு நடக்கின்றபோது, தோற்றப் பொலிவான வீரமிக்க காளைகள், தங்கள் அருகில் வந்து, திமிலைத் தழுவ நெருங்குகின்றவர்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடும். அதனால்தான், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழ் இலக்கியத்தில் Ôஏறு தழுவுதல்Õ எனக் குறிப்பிட்டனர்.

இந்த நிகழ்வின்போது, காளை மாடுகளுக்கு எந்த காயமும் ஏற்படுவது இல்லை. ஆனால், மாடுகளைத் தழுவ முனைகின்ற இளைஞர்களுக்கு சில நேரங்களில் காயம் ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் ஆண்கள், பெண்கள் குடும்பத்தோடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்வார்கள். வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டைப் பார்க்க வருவார்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியும், அக்கூட்டணி அரசில் இடம் பெற்று இருந்த தி.மு.க.வும்தான் உண்மை குற்றவாளிகள். 2011 ஜூலை 11&ந் தேதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வீடுகளில் விவசாயிகள் வளர்க்கின்ற காளை மாடுகளை, காடுகளில் உலவுகின்ற கொடிய விலங்குகளின் பட்டியலில் இணைத்தது. இந்த விலங்குகளை, காட்சிப்பொருளாக நிகழ்ச்சிகளில் அனுமதிக்கக்கூடாது என்பதற்கான பட்டியல் அது. அப்போது மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷ் இதனை நியாயப்படுத்தி, Ôஜல்லிக்கட்டு என்பது காட்டுமிராண்டி நிகழ்ச்சிÕ என்றார்.

இந்த பிரச்சினையில் உண்மை குற்றவாளியான தி.மு.க., தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்களத்தில், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பழியை இன்றைய மத்திய&மாநில அரசுகள் மீது போட்டு, தனக்கு அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றது.
ஸ்பெயின் நாட்டில் காளைச் சண்டை பல ஆண்டுகளாக நடைபெறுகின்றது. அதில், காளை மாடுகளின் கழுத்தில் குத்தீட்டிகளைச் சொருகுகின்றனர்; அதனால் காளை மாடுகள் படுகாயமுற்று இறந்துபோகின்றன. ஸ்பெயின் நாட்டில் உள்ள கேடலோனியா மாநில அரசு காளைச் சண்டைக்கு தடை விதித்தபோது, ஸ்பெயின் நாட்டின் உச்சநீதிமன்றம் அந்த தடையை ரத்து செய்தது.

இதுகுறித்து தங்களிடம் நேரடியாக விளக்கியபோது, ஜல்லிக்கட்டை நடத்துவதில் நியாயம் இருக்கிறது என்று கருதிய நீங்கள், தடையை நீக்குவதற்கு ஆவன செய்வதாக என்னிடம் கூறினீர்கள்.

இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட பிறகும்,  தீர்ப்பை வெளியிடாமல் நிறுத்தி வைத்து இருக்கின்றது. அதனால், மத்திய அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்க அவசர சட்டம் கொண்டு வருவதற்கு தயங்குவதாக அறிகின்றேன்.

ஆனால், ஜல்லிக்கட்டு பிரச்சினை தமிழ்நாட்டில் தற்போது விசுவரூபம் எடுத்து விட்டது. தைப்பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு தடை நீக்கப்படவில்லை என்பதால், தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும், விரக்திக்கும் ஆளாகி விட்டனர். இதன் விளைவாகப் பல இடங்களில் இளைஞர்கள் தாங்களாகவே காளைகளைக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த முற்பட்டனர். இது இயல்பாக கிளர்ந்து எழுந்த உணர்ச்சி. ஆனால் பல இடங்களில் அந்த இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் காவல்துறையின் தடியடி பிரயோகத்திற்கும் ஆளாகினர்.

தைப்பொங்கலுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற போராட்டம் நீடிக்காது என்று அரசு அதிகாரிகள் நினைத்தார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரும் போராட்டம் தமிழகம் எங்கும் காட்டுத்தீயெனப் பரவி வருகின்றது. குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் அறப்போர்க்களத்தில் குதித்துவிட்டனர். அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. அம்மாணவர்கள், பெண்களும், ஆண்களும் வகுப்புகளுக்கு செல்லாமல், தாங்களாக முன்வந்து, இடைவிடாது தொடர்ந்து அறவழிப் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

தமிழர்களின் பண்பாட்டின் மீதும், நாகரிகத்தின் மீதும் ஜல்லிக்கட்டு தடையின் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டு விட்டதாகவே மாணவர் சமுதாயம் நியாயமான ஆத்திரம் அடைந்து இருக்கின்றது.

இப்போது நடக்கின்ற அமைதிப் போராட்டம், 1965&ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் போல ஒரு போர்க்களமாக வெடிக்கக்கூடும் என நான் கருதுகின்றேன். நான் மாணவர் இயக்கத்தில் இருந்து அரசியலுக்கு வந்ததால், மாணவர்களின் நாடித்துடிப்பை நன்றாக அறிவேன்.
இத்தகைய சூழ்நிலையில், தாங்கள் சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து, உடனடியாக ஒரு அவசர பிரகடனத்தின் மூலம், கொடிய விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, அதனை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.

இந்த பிரச்சினையில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நிலைமை விபரீதமாகி, பின்னர் நடைபெறும் போராட்டம் அரசாங்கத்தால் அடக்க முடியாத அளவுக்கு எல்லை மீறி விடும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டியது என்னுடைய கடமை என்பதால் இதனை எழுதி இருக்கின்றேன்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்வீர்களானால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் அல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை