“சிவலிங்கா, எனக்கு திருப்பமாக இருக்கும்” -சக்தி வாசு
இதுபற்றி அவர் கூறியதாவது:-
“சினிமாவில், கதைதான் முக்கியம். தனுஷ், விஜய் சேதுபதி இருவரும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்கள்.
நல்ல கதை அமையும் பட்சத்தில், 2 கதாநாயகர்களின் படங்களில் நடிப்பதில் ஆட்சேபனை இல்லை. ‘சிவலிங்கா’ படத்தில் லாரன்சுடன் இணைந்து நடித்து இருக்கிறேன்.
எங்க அப்பா வாசு இயக்கியிருக்கிறார். இந்த படம், கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்து வெளிவந்தது. படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்திலும் நான் நடித்து இருந்தேன்.
தமிழ் படத்திலும் நான் இருக்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டு நடித்து இருக்கிறேன். படத்தில், முஸ்லிம் இளைஞராக வருகிறேன். நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக அமைந்தது. என் நடிப்பை அப்பாவும் பாராட்டினார்.
‘சிவலிங்கா,’ கிரைம்-திகில் படமாக தயாராகி இருக்கிறது. ஒரு புறாவை வைத்தே கதை நகரும். இந்த படம் எனக்கு ஒரு திருப்பமாக இருக்கும். முக்கியமான படமாக இருக்கும். அடுத்த படத்துக்கு கதை கேட்டு வருகிறேன். சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்து, என் நடிப்பு திறமையை வெளிப்படுத்துவேன்.”